தூத்துக்குடி, ஏப். 24: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நாளை மறுதினம் (26ம் தேதி) நடக்கிறது. இதில் கனிமொழி எம்பி, தொகுதி பொறுப்பாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை அடுத்த மங்களகிரி விலக்கு பகுதியில் நாளை மறுதினம் (26ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதில் மகளிர் அணி மாநில செயலாளரான கனிமொழி எம்.பி., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கே.என்.நேரு எம்எல்ஏ., நான் (அனிதா ராதாகிருஷ்ணன்) தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சண்முகையா மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொகுதி தேர்தல்பணிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகின்றனர். எனவே, கட்சி நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், சார்பு அணியினர், கூட்டணி கட்சியினர் என அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.