×

ஐஎஸ் அமைப்பை ஆதரிக்கும் நாடுகள் மீது ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுச்சேரி, ஏப். 24: இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பு உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு புதுச்சேரி மாநில  காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜென்மராக்கினி தேவாலயத்தின் எதிரில் நடந்தது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து அடக்க நினைத்தாலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்கிறது. இலங்கையில் நடந்த இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இத்தகைய கொடிய செயலில் ஈடுபட்ட ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தரும் நாடுகள் மீது ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக நாடுகள் தீவிரவாதத்தை அறவே ஒழிக்க வேண்டும். இலங்கையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய புதுவை அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.இதேபோல அண்ணா சிலை அருகே மகிளா காங்கிரஸ் சார்பிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Tags : UN Council ,countries ,IS ,
× RELATED மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம்...