தஞ்சை, ஏப்.24: பள்ளி விடுமுறை காலங்களில் உறவினர்களின் வருகை குறைவதால், கிராமத்தில் வாழும் முதியோர்கள் ஏக்கத்துடன் அதிக மன அழுத்தத்தில் காலம் கழித்து வருகின்றனர்.தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் விவசாய பணிகள் குறைந்தன. இதனால் வேலை வாய்ப்பு குறைந்ததால் கிராமப்புற மக்கள் சிலர் கடந்த 25ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி கிராம வாசிகள் நகரங்களுக்கு குடி பெயரத் தொடங்கினர். குக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், நகரங்களை நோக்கி சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான கிராமங்களில் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. கிராம புறங்களில் உள்ள சில வீடுகள் பூட்டியோ அல்லது வீட்டிற்கு முதியவர் ஒருவரோ அல்லது இருவரோ மட்டுமே இருக்கும் நிலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளு க்கு முன்பு வரை, நகரங்களில் வசிக்கும் கிராமத்தினர், உள்ளூர் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஆண்டு தோறும் பள்ளி முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை காலங்களில் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு வந்து விடு முறை யை கழித்து வந்தனர். ஆனால், தற்போது கிராமங்களுக்கு வருவது முற்றிலும் படிப் படியாக குறைந்து போனது.
இந்தாண்டு பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், கிராமங்களுக்கு பெரும்பாலானோர் வரவில்லை. பல்வேறு கோடை கால பயிற்சி களுக்கு பிள்ளைகளை அனுப்பவதால், கிராமங்களுக்கு சென்று உறவினர்களோடு இருக்கும் நிலை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் விடுமுறைக்காவது தனது உறவினர்கள் வருவார்களா என காத்திருக்கும் முதியோர்கள் ஏமாற்றத்துடன் அதிக மன அழத்தத்தில் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து கிராமங்களில் வசிக்கும் முதியோர்கள் கூறியதாவது: எப்போதும் தனிமையிலேயே வசித்து வருகிறோம். விடுமுறையில் வந்து சென்ற பிள்ளைகள், தற்போது குழந்தைகளுக்கு பல்வேறு பயிற்சி வகுப்பில் பங்கேற்பதால் வர முடியாது என்கின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை கூட எங்கள் பிள்ளைகளை பார்க்க முடியவில்லை. பிள்ளைகள் எங்களை அருகில் இருந்து கவனிக்க வேண் டாம். ஆண்டிற்கு ஒரு முறையாவது வீட்டிற்கு வந்து சில நாட்கள் குழந்தைகளோடு தங்கியிருந்தால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்றனர்.