×

மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரிப்பு

திருப்பூர், ஏப்.23:   திருப்பூர் மாநகருக்குட்பட்ட பஸ் நிலைய பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.  தற்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிலும் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் ரயில் நிலையம் அருகே, கோர்ட் ரோடும் ஊத்துக்குளி ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ள மேம்பாலம், வாலிபாளையம், நொய்யலாற்றின் ஓரம், மின்மயானம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களிடம் இருந்து பைக்குகளில் வரும் மர்ம நபர்கள் சிலர் செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் அவலம் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பயத்துடனேயே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இரவு மற்றும் பகல் நேரங்களில் குறைந்த அளவிலான பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் நிலையில் அவர்களை குறி வைத்து திருப்பூரில் உள்ள சில வழிப்பறி திருடர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றி கொண்டே வருகின்றனர். ரோட்டில் செல்போன் பேசியபடியோ, உபயோகித்தபடியோ அல்லது செல்போனை கையில் வைத்தபடி யாராவது நடந்து சென்றால், இருசக்கர வாகனத்தில் வரும் இந்த மர்ம நபர்கள் எதிர்பாராத விதமாக திடீரென செல்போனை அவர்கள் கைகளில் இருந்து பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி செல்கின்றனர்.  இது வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதனால் போலீசார் காலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வழிப்பறிகளில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags : events ,city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்