பந்தலூர், ஏப். 22: பந்தலூர் அருகே பொன்னானி முத்துமாரியம்மன் கோயில் 8ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. பொன்னானி முத்துமாரியமன் கோயிலில் கடந்த 19ம் தேதி காலை மஹா கணபதி ஹோமம், கொடியேற்றுதல், சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. இதில் நேற்று முன்தினம் காலை அம்மன் அலங்காரம் பூஜை நடந்தது. தொடர்ந்து பொன்னானி ஆற்றில் இருந்து பறவைக்காவடி, பால்குடம் ஊர்வலம் நடந்தன. இதையடுத்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருத்தேர் திருவீதியுலா நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜைகளுடன் மஞ்சள் நீராட்டுவிழா, அம்மனை வழியனுப்புதல் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.