×

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கன மழை

குன்னூர், ஏப்.22: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்குறைவு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவந்தது. மேலும், தேயிலை தோட்டங்கள் மற்றும் மலைக்காய்கறி தோட்டங்களில் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச முடியாமல் ஆறுகள் மற்றும் குளங்கள் வற்றி காணப்பட்டது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மரங்கள் வெயிலில் காய்ந்து காட்டு தீ ஏற்பட்டு மரங்கள் மற்றும் தாவரங்கள் தீயில் கருகிவந்தன. மேலும், காட்டெருமை, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத்துவங்கின. இதனால் மனித விலங்கு மோதல்கள் ஏற்பட்டுவந்தது. இதனிடையே கடந்த சில தினங்களாக குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு 10 மணி முதல் விடிய விடிய கன மழைப்பெய்ததால் ஆறுகள் மற்றும் குளங்கள் நிறையத்துவங்கியுள்ளது. இதனால் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : neighborhood ,Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...