பெரம்பலூர், ஏப். 22: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பின்றி பூட்டப்பட்ட நிலையில் தபால் வாக்குகள் செலுத்தும் மையம் உள்ளது. எனவே 24 மணி நேரமும் திறந்து வைத்து போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்தும் வகையில் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது வழக்கம். கடந்த 8ம் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த தபால் வாக்கு செலுத்தும் மையம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்த ஏதுவாக அனைத்து நாட்களிலும் திறந்து வைத்திருக்க வேண்டும். பாதுகாப்புக்காக யோலீசாரும் பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
ஆனால் இந்த அறை தற்போது பூட்டப்பட்ட நிலையில் போலீசாரும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும் தபால் வாக்கு செலுத்த வருபவர்களும் தபால் வாக்கு மையம் பூட்டப்பட்ட நிலையில் உள்ளதால் வாக்குகளை போட முடியாமல் ஏமாற்றத்துடன் புலம்பியவாறு திரும்பி செல்கின்றனர். மேலும் தபால் வாக்கு செலுத்தும் மையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக தெரிவிக்கின்றனர். எனவே தபால் வாக்கு மையம் திறக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.