அருப்புக்கோட்டை, ஏப். 22: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு சமூக மக்கள், தங்களது சமூகத்தை அவதூறாக பேசி, சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களை கைது செய்யக்கோரி, அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏடிஎஸ்பி முகமது அஸ்லாம், டிஎஸ்பி வெங்கடேசன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். இதனையத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாலையம்பட்டி, செம்பட்டி, ஆத்திபட்டி, புதிய பஸ்நிலையம், காந்திநகர் நான்குவழிச்சாலை ஆகிய பகுதிகளில் 400க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காரியாபட்டி:
காரியாபட்டியில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் கரிசல்குளம் பாண்டி தலைமையில், தேமுதிக கிளைச்செயலாளர் சுப்பிரமணி, சங்க தென் மண்டல அமைப்பு செயலாளர் பரமன், கிராமத்து பொறுப்பாளர் பாலு முன்னிலையில் சமூக மக்கள் காரியாபட்டி காவல்நிலையத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அந்த மனுவில், ‘சமூகத்தை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும். சமூக மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என கோரி, சிவகாசி பொறுபு டி.எஸ்.பி பிரபாகரன், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோரிடம் நேற்று மனு அளித்தனர். நடவடிக்கை இல்லையெனில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர். பின்பு பஸ்நிலையம் வரை ஊர்வலமாக சென்று கலைந்து சென்றனர்.