தூத்துக்குடி, ஏப்.22: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவலாயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. தூத்துக்குடி சின்னகோவில் திருஇருதய பேராலயத்தில் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தூய பனிமய பேராலயத்தில் பங்குதந்தை லெரின் டிரோஸ் தலைமையிலும், புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குதந்தை சுசீலன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. முத்தையாபுரம் புனித அதிதூதர் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிறப்பு ஈஸ்டர் திருப்பலிகள் நடந்தன. இதுபோல மில்லர்புரம் புனித பவுலின் ஆலயம், டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம், வடக்கூர் பரி பேட்ரிக் இணை பேராலயம், சண்முகபுரம் பரி பேதுரு ஆலயம், ஆசிரியர் காலனி பரி திருத்துவ ஆலயம், திரவியபுரம் சகல பரிசுத்தவான்களின் ஆலயம் உள்ளிட்டு அனைத்து சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் சிறப்பு ஈஸ்டர் ஆராதனைகள் நடந்தது.
தூத்துக்குடி கிறிஸ்தவ விசுவாச ஜெனரல் அசெம்பிளி சபையில் தலைமை போதகர் பால் ஆண்ட்ரூ கனகராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள், ஆராதனைகள், திருப்பலிகள் நடந்தன. திரளான கிறிஸ்தவ மக்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.
குளத்தூர்: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தருவைகுளம் தூயமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் உயிர்த்தெழுதல் ஆராதனை மற்றும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் இயேசுகிறிஸ்து உயிர்ப்பு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பங்குதந்தை எட்வர்ட்ஜே தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடந்தது. ஆன்மீகதந்தை பர்னபாஸ், திருத்தொண்டர் திலகர், அருட்சகோதரர் இனிகோ, வேதியர்மார்டின், கார்னல்சபை அருட்சகோதரிகள், தூய வியாகுல அன்னை சபை அருட்சகோதரிகள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூர் கிறிஸ்து மறுரூப ஆலயத்தில் சேகரகுருவானவர் வெலிங்டன்ஜோசப் தலைமையில் உயிர்த்தெழுதல் ஆராதனை நடந்தது.