வேலூர், ஏப்.22: காட்பாடி அருகே விவசாய நிலத்தில் 1 டன் செம்மரக்கட்டை பதுக்கிய கும்பலை பிடிக்க துப்பு கிடைக்காமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அவருடைய நிலத்தை வேண்டா என்பவர் குத்தகைக்கு எடுத்து மாட்டு தீவன பயிர் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி விவசாய நிலத்திற்கு வேண்டா சென்றார். அப்போது, நிலத்தில் ஆங்காங்கே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலத்தில் பதுக்கி வைத்திருந்த சுமார் 1 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
செம்மரக்கட்டை பதுக்கிய கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியும் செம்மரக்கட்டை பதுக்கிய கும்பல் குறித்து எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. செம்மரம் பதுக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அரியூரில் கார் ஷெட்டில் வேனுடன் செம்மரம் பதுக்கியது குறித்து கார் ஷெட் உரிமையாளரை கைது செய்தனர். ஆனால் செம்மரம் பதுக்கிய முக்கிய குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.