கன்னியாகுமரி, ஏப். 21: கன்னியாகுமரி அருகே சிலுவைநகர் பகுதியை சேர்ந்தவர் யோஜின்(43). மீன்பிடி தொழிலாளி. இவரது நண்பர் ராபின்சன். நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வீட்டருகே நான்கு வழிச்சாலையில் நடந்து ெசன்று கொண்டிருந்தனர்.அப்போது எதிரே தென்தாமரைக்குளம் அருகே புன்னையடி பகுதியை சேர்ந்த சார்லஸ்(39) என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவர் குடிபோதையில் பைக்கை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக யோஜின் மீது பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த யோஜின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் இந்த விபத்தில் சார்லசும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.