குளத்தூர்,ஏப்.21: கீழவைப்பாரில் புனித வெள்ளியை முன்னிட்டு கல்லறை திருநாள் நிகழ்ச்சியில் நேர்த்தி கடனாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தீவெட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.கீழவைப்பார் புனித மோட்ச அலங்கார அன்னை ஆலயத்தில் நேற்று முன்தினம் புனித வெள்ளியை முன்னிட்டு காலையில் சிலுவைபாடு நிகழ்ச்சி நடந்தது. பங்குதந்தை அலாய்சியுஸ் திருச்சிலுவை ஆராதனை நடத்தினார். தொடர்ந்து மாலை 6மணிக்கு இயேசுகிறிஸ்து மறித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதை தியானித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தீவெட்டி ஏந்தி இயேசு கிறிஸ்துவின் சடலம் கொண்டதாக சவபெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர். நேர்த்திகடனாக தீவெட்டி ஏந்தி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் இங்கு மட்டுமே நடைபெறுவது சிறப்பம்சமாகும். இதேபோல் தருவைகுளத்திலும் சிலுவைபாதை நிகழ்வுகள் பங்குதந்தை எட்வர்ட்ஜே தலைமையில் நடந்தது. குளத்தூர் தூயகிறிஸ்துமறுரூபஆலயத்தில் பங்குதந்தை வெலிங்டன்ஜேசப் தலைமையில் சிலுவைபாதை ஆராதனை நடந்தது.