மணப்பாறை, ஏப்.21: மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடிக்கு நேற்று மதியம் கார் ஒன்று வந்தது. காரில் 4 வாலிபர்களும் ஒரு இளம் பெண்ணும் இருந்தனர். சுங்க கட்டணம் செலுத்த கார் நின்றபோது, திடீரென காரில் இருந்த அந்த இளம்பெண், தன்னை சிலர் கடத்தி செல்வதாக கூறி, கதறி அழுதவாறு, காரின் கதவை வேகமாக திறந்து வெளியேறி சுங்கச்சாவடியில் பணியில் இருந்த பெண் ஊழியர் அருகே நின்று கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் வையம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வையம்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரிக்க முயன்றபோது காரில் இருந்த சிலர் தப்பியோடிவிட்டனர்.
இதன் பின்னர், அந்த இளம் பெண்ணையும், காரில் இருந்த மற்றொரு வாலிபரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அந்த பெண், திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருவதும், காரில் அந்த மாணவியை அழைத்து வந்த வாலிபர் உறவினர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. காரில், மேலும், சில வாலிபர்கள் வந்ததால் சந்தேகமடைந்து அந்த மாணவி அழுததும் தெரிய வந்தது. இதனையடுத்து, மாணவியின் பெற்றோரை வரவழைத்த போலீசார் அவர்களிடம் மாணவியை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் வையம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.