கம்பம், ஏப்.19: கம்பம் ஓடைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் துர்கேஷ்(21) என்ஜினியரிங் படித்துள்ள இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இவர் தனது முதல் ஓட்டை முகையதீன் ஆண்டவர் புரத்திலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முதன் முறையாக வாக்களித்தது பற்றி துர்கேஷிடம் கேட்டபோது, ``கடந்த சில ஆண்டுகளாக என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்பு இல்லை. படித்தவர்களுக்கு வேலை வேண்டும். என் முதல் ஓட்டிலேயே மாற்றம் ஏற்படவேண்டும்’’ என்றார்.
கல்லூரி மாணவி கவுசல்யா: எனது முதல் வாக்கு இதுதான். வாக்குச்சாவடிக்குள் நுழைந்தபோது சற்று பதற்றமாக இருந்தது. பின் பதட்டம் தணிந்து, நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசு வேண்டும் என்று எனது முதல் வாக்கைப் பதிவு செய்
தேன்.
கம்பம் 6 வது வார்டு மந்தையம்மன் கோயிலைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (90) என்ற மூதாட்டி நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஓட்டுப் போட்டார். இதற்காக உத்தமபுரம் கள்ளர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு ஆட்டோ மூலம் வந்தார். வயது முதிர்வின் காரணமாக நடக்க முடியாததால் அவரது உறவினர் ஒருவர் மூதாட்டியை வாக்குச்சாவடிக்கு தூக்கிச் சென்று ஓட்டளிக்க வைத்தார். தள்ளாடும் வயதில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டியை தேர்தல் அதிகாரிகள் பாராட்டினர். ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கம்பம் அருகே உள்ள நாராயணதேவன் பட்டி ஊராட்சியில் உள்ள 246 வது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானது. முக்கால் மணி நேரத்திற்கு பின் சரிசெய்யப்பட்டது.