க.பரமத்தி, ஏப். 19: கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி க.பரமத்தி அடுத்த பெரியதிருமங்கலம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மக்களவை தொகுதி முழுவதும் அமைதியாகவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையிலும் ஒவ்வொரு வாக்காளரும் தான் விரும்பிய சின்னத்தில் வாக்களிக்கும் வண்ணம் தேர்தல் கமிஷன் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்தும் என நம்புகிறேன். இதுவரை கரூர் தொகுதிக்குட்பட்ட எந்த வாக்குசாவடி மையத்திலும் இயந்திரம் பழுது என்றோ, பிரச்னை என்றோ எனக்கு எந்த தகவலும் வரவில்லை. நிருபர்கள், கரூர் மக்களவை தொகுதியில் ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் நடத்தும் அலுவலர் செயல்படுவதாக தொிவித்திருந்தீர்களே, தற்போது எப்படி? என்று கேட்டபோது, அது பற்றி இப்போது பேச விரும்பவில்லை. தேர்தல் முடிந்த பிறகு பேசுவோம் என்றார்.