கொள்ளிடம், ஏப்.19: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் லட்சுமி நாராயணபெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமண விழா சித்ரா பவுர்ணமி பிரம்ம உற்சவத்தில் 7ம் திருநாளான நேற்று மாலை நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி உடனான லட்சுமி நாராயணப்பெருமாள், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகமும் திருகல்யாணமும் நடைபெற்றது. விழாவில் மாலை மாற்று உற்சவமும், தாலி கட்டும் வைபவமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பெருமாள் திருமணக்கோலத்தில் பல்லக்கில் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. விழாவில் பாகவதர்களின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.