×

ஓசூர் அருகே நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம் டாஸ்மாக் கடை தீவைத்து எரிப்பு பல லட்சம் சரக்கு பாட்டில்கள் சேதம்

ஓசூர், ஏப்.19: ஓசூர் அருகே கொலகாசபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு டாஸ்மாக் மதுபான கடையை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால், பல லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் சேதமடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை கொலகாசபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக சண்முகம் பணியாற்றி வருகிறார். நேற்று நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அரசு மதுபான கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.  

அதனால், இந்த கடையின் விற்பனையாளர் சண்முகம், கடந்த 16ம் தேதி இரவு விற்பனையை முடித்து விட்டு கடையை பூட்டி சீல் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று காலை மதுபானக்கடை தீவிபத்தில் இடிந்த நிலையில் இருப்பதாக, கிராம மக்கள் சண்முகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, நள்ளிரவு மர்ம நபர்கள் கடைக்கு தீவைத்துள்ளது தெரியவந்தது. கடையின் மரக்கதவுகள் எரிந்ததுடன், உள்ளே மதுபான பட்டிகள் உடைந்து முற்றிலுமாக எரிந்த நிலையில் இருந்தது.

இதுகுறித்து சண்முகம் பாகலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான மது பாட்டிகள் உடைந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவு டாஸ்மாக் கடையை மர்மநபர்கள் தீவைத்து எரித்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : mosque ,Hosur ,Kollam Taskmachu ,millions ,
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்