நெய்வேலி, ஏப். 19: நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஒன்றியம் கோட்டேரி ஊராட்சியில் இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் நூறு நாள் வேலை திட்டம், பிறப்பு, இறப்பு, பள்ளி மாணவர்களின் சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்றவற்றை கிராம மக்கள் எளிதில் பெறுவதற்கு கிராம சேவை மையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்
களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சேவை மையம் அமைக்கப்பட்டது, இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நலன் கருதி கடந்த 2014- 15ம் ஆண்டு ஊராட்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூ.14.43 லட்சம் மதிப்பில் கிராம சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் ஊராட்சியில் கிராம சேவை மையம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இங்குள்ள மக்கள் தங்கள் சான்றிதழ் பெறுவதற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த சேவை மையத்தில் சிலர் இரவு நேரத்தில் மது அருந்தி விட்டு செல்கின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி கிராம சேவை மையத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.