நெய்வேலி, ஏப். 19:கடலூர் மக்களவை தொகுதி தேர்தலை முன்னிட்டு நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மொத்தம் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். இதில், சுமார் 20க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மாலை சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வாக்குச்சாடியை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்குத்து ஆய்வாளர் ரவீந்திரராஜ் தலைமையிலான போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து எஸ்பி சரவணன், நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.பின்னர் எஸ்பி சரவணன் கூறுகையில், மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டதால் வாக்குப்பதிவு சற்று காலதாமதமானது என்றார்.