புதுக்கோட்டை, ஏப். 18: புதுக்கோட்டை திருவரங்குளம் பிடாரிஅம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மின் அலங்காரம், நாகசுரக் கச்சேரியுடன் திருவரங்குளம் அனைத்து வியாபாரிகள் சங்கம், கிட்டக்காடு, புதூர், பெரியநாயகிபுரம், இடைத்தெரு, தெற்கு தெரு, கோவில்பட்டி, பாரதியார்நகர், இடையன்வயல், கே.வி.எஸ் நகர் ஆகிய இடங்களிலும் இருந்தும் பக்தர்கள் பூக்களை ஏந்தி வந்தனர். வரும் 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சாமி வீதியுலா, சந்தனக்காப்பு அலங்காரம், அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்ச்சியாக 8ம் திருநாளன்று (ஏப். 30ம் தேதி) பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். தொடர்ந்து பூசாரி கிடா வெட்டுதல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.