மண்ணச்சநல்லூர், ஏப்.18: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேவாளாடி பெரியார் தெருவை சேர்ந்தவர் ரெங்கதுரை (39). கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி(32). இவர்களது மகன் கணீஷ் (14). 9ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் விடுமுறை என்பதால் நேற்று கணீஷ் தனது தந்தை வேலை செய்யும் கட்டிடத்திற்கு சென்று, அங்கு தந்தைக்கு உதவியாக சிமெண்ட் கலவை இரும்பு சட்டியை எடுத்துக் கொடுத்து உதவி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிமெண்ட் கலவை இரும்பு சட்டி அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் கணீசை மின்சாரம் தாக்கியது. அப்போது தந்தை கண்முன்னே மாணவர் கணீஷ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணீஷ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.