×

தடையை மீறி பைக் பேரணி பாஜ கூட்டணி கட்சியினர் 200 பேர் மீது வழக்கு

குலசேகரம், ஏப். 18: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்து, நேற்று முன்தினம் கூட்டணி கட்சியினர் குலசேகரத்தில் இருந்து தக்கலைக்கு பைக் பேரணி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் அன்று மாலை 3 மணியளவில் தடையை மீறி பைக் ஊர்வலம் புறப்பட்டது. குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் திருவட்டார், வீயன்னூர், காட்டாத்துறை வழியாக தக்கலையில் நிறைவடைவதாக இருந்தது. இந்த நிலையில், அதிரடிப்படை போலீசார் காட்டாத்துறை சந்திப்பில் வைத்து ஊர்வலத்தை மடக்கினர்.

போலீசாரை கண்டதும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கலைந்து சென்றனர். இது சம்பந்தமாக கல்குளம் தாசில்தார் தாஜ்நிஷா குலசேகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், தேமுதிக குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் டல்லஸ், அதிமுக திருவட்டார் ஒன்றிய செயலாளர் ஜெயசுதர்சன் உட்பட பாஜ, அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bike rally ,BJP ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை...