ஊத்தங்கரை, ஏப்.18: ஊத்தங்கரை அருகே அனுமன்தீர்த்தம் பகுதியில், மரத்தடியில் வைத்து மதுபானம் விற்பனை செய்தவரை நேற்று கைது செய்த போலீசார், 112 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊத்தங்கரை அடுத்த அனுமன்தீர்த்தம் பகுதியில் மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார், நேற்று அனுமன்தீர்த்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஆற்றங்கரை அருகே புளியமரத்தின் அடியில், மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் அனுமன்தீர்த்தத்தை சேர்ந்த மாரியப்பன்(36) என்பதும், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாரியப்பனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 112 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.