×

நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் நாளை கஜமுகா சூரன் சம்ஹார உற்சவம்

காஞ்சிபுரம், ஏப்.18: காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயிலில் நாளை கஜமுகா சூரன் சம்ஹார உற்சவம் நடைபெற உள்ளது. கஜமுகா சூரன் சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்து அழியா வரத்தினை பெற்றான். அந்த கர்வத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தினான். கஜமுகா சூரனை விநாயகரை தவிர வேறு யாராலும் அடக்க முடியாது என அறிந்த தேவர்களும், முனிவர்களும் விநாயகரிடம் அசுரன் செய்யும் கொடுமைகளை முறையிட்டு வணங்கினார்கள். இதையடுத்து விநாயகர், கஜமுகா சூரனுடன் போர் புரிந்தார். இதில், தோல்வியடைந்த சூரன், மூஷிகமாக உருமாறி அஞ்சி ஓடி இறுதியில் விநாயகரிடம் சரணடைந்தான். தனது தவறை உணர்ந்த சூரனை, தனது மூஷிக வாகனமாக ஏற்றுக் கொண்டார் விநாயகர்.

இதனை நினைவுகூறும் வகையில் உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர்  திருக்கோயிலில் நாளை கஜமுகா சூரன் உற்சவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல்கால வேள்வி பூஜை, நாளை காலை 2ம் கால வேள்வி பூஜை மற்றும் விநாயகருக்கு நவகலச அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு நட்சத்திர விருட்ச விநாயகர் உற்சவர் மற்றும் சேத்துப்பட்டு கிராமத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரீஸ்வரர் உற்சவர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் அலங்காரம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்கின்றனர்.

Tags : Kajamugha Surana Samhara Festival ,Ganesha Vinayagar ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...