திருவொற்றியூர், ஏப். 18: மணலி அருகே டயர் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மணலி அருகே கன்னியம்மன் மேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் மறு சுழற்சிக்கான உற்பத்தி பொருள் தயாரிக்கும் குடோன் உள்ளது. இங்கு புதிய டயர்களை தயாரிக்க பழைய டயர்களை பவுடராக்கி அதை மறுசுழற்சிக்காக வெளி ஊர்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணிக்கு குடோனில் குவித்து வைக்கப்பட்டிருந்த டயர்களில் திடீரென்று தீ பற்றியது. காற்று பலமாக அடித்ததால் தீ வேகமாக பரவி அந்த பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலத்திற்கு புகைமூட்டம் ஆகியது. இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம், மணலி பகுதியை சேர்ந்த நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து மணலி போலீசார் விசாரிக்கின்றனர்.