சிதம்பரம், ஏப். 18: சிதம்பரம் சுப்பிரமணியன் தெருவில் உள்ள வல்லபி மாரியம்மன் கோயிலில் திருப்பணி முடிந்து மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 4ம்கால யாகசாலை பூஜையும், விஷேச திரவிய ஹோமங்களும் நடந்தன. பின்னர் யாகசாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கலச நீர் கோயில் விமானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதனை தொடர் ந்து நடந்த தீபாராதனைக்கு பிறகு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு மேல் சாமிக்கு மகாபிஷேகம் மற்றும் சாமி வீதியுலா புறப்பாடு ஆகியவை நடந்தது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை திருப்பணி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.