திருச்சி, ஏப்.17: திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2,531 வாக்குச்சாவடியில் 12,314 அலுவலர்கள் பணிபுரிவதற்கான பணி ஒதுக்கீடு நேற்று நடந்தது. தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் 1, 2, 3 மற்றும் வாக்காளர் எண்ணிக்கை 1,200 மற்றும் அதற்கு மேல் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர் 4 ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கணினி மென்பொருள் மூலம் குலுக்கல் முறையில் இறுதிக்கட்டமாக தேர்வு செய்யப்பட்டது. இதில் திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். பொது பார்வையாளர் அமித்குமார் முன்னிலை வகித்தார். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் 1563, ரங்கத்தில் 1646, திருச்சி (மேற்கு) 1329, திருச்சி (கிழக்கு) 1288, திருவெறும்பூர் 1449, லால்குடி 1200, மண்ணச்சநல்லூர் 1316, முசிறி 1232, துறையூர் (தனி) 1291 என மொத்தம் 12,314 அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களில் நான்கு நிலையில பணிபுரிய உள்ளனர்.
பணி ஒதுக்கீடு தெரிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவருக்கும் துறை வாரியாக, வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாகவும் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி ஆகிய வழிகள் மூலமாகவும் ஏப்ரல் 17 (இன்று) நடைபெறும் பயிற்சி வகுப்பில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான பணி ஆணை வழங்கப்படும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.