×

உசிலை அருகே பரபரப்பு மேலூர் அருகே மணமான 6வது நாளில் புதுப்பெண் மர்மச்சாவு?

மேலூர், ஏப். 17: மேலூர் அருகே திருமணமான 6வது நாளில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் ஒய்யப்பன். இவரது மகள் ராஜலட்சுமி (24). இவருக்கும், எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் வீரபாண்டிக்கும் (27), கடந்த 10ம் தேதி திருமணம் நடைபெற்றது. மறுநாளே தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் வீரபாண்டி, மாமனார் வெள்ளைச்சாமி ஆகியோர் ராஜலட்சுமியை, அவரது தந்தை வீட்டில் நேற்று விட்டுச்சென்றனர்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில், ராஜலட்சுமி வாயில் நுரை தள்ளி இறந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ஒய்யப்பன் அளித்த புகாரில், ‘‘கணவர் வீட்டில் ராஜலட்சுமிக்கு விஷம் கொடுத்து, எனது வீட்டில் கொண்டு வந்து விட்டுள்ளனர். அவரின் சாவில் சந்தேகம் உள்ளது’’ என தெரிவித்துள்ளார். திருமணமான 6வது நாளில் புதுப்பெண் விஷம் குடித்து இறந்ததால், இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரித்து வருகிறார்.

Tags : Newest Marmaccu ,Thrissur ,Melur ,
× RELATED திருச்சூரில் பூரம் விழாவில் யானைகளை...