கடலூர், ஏப். 17: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் காசி தங்கவேல் முடித்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரசாரம் ஓய்ந்தது. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காசி தங்கவேல் பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்களிக்க ஆதரவு கேட்டு சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார். நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தை கடலூர் நகராட்சி பகுதியில் மேற்கொண்டார். திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு பெற்றது. அப்போது அவர் பரிசு பெட்டி சின்னத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதிமுகவின் உண்மையான வழி நடத்தலை டிடிவி தினகரன் தான் மேற்கொண்டு வருகிறார். எனவே ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலர டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். அதற்கு பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். பிரசாரத்தில் அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கடலூர் நகர செயலாளர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் ராயல், செந்தில், ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, எம்ஜிஆர் மன்றம் தொழிலதிபர் முருகன், உடற்கல்வி ஆசிரியர் சிவா, நெல்லிக்குப்பம் முன்னாள் துணை சேர்மன் அப்துல் ரஷீத், கட்சியின் நகர துணைத்தலைவர் சுதாகர், மகளிரணி கரோலின், மாணவரணி முகிலன், கிளை கழக செயலாளர் கணேசன், கலையரசன் மற்றும் மாநில, மாவட்ட, கிளை கழக அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விருத்தாசலத்தில் கலைச்செல்வன் எம்எல்ஏ அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தை முடித்தார்.