நாகை, ஏப்.16:நாகை மாவட்டத்தில் பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் இன்று (16ம் தேதி) மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம், தேர்தல் பொதுக்கூட்டம், பேரணி நடத்துதல், பங்கேற்றல், உரையாற்றுதல் கூடாது, திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் அல்லது சமூக ஊடகங்கள் வாழியாக தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொருள் குறித்தும் பொது மக்களிடம் காட்சிப்படுத்த கூடாது, பொது மக்களை கவரும் நோக்கிலோ, தேர்தல் பிரசாரம் செய்யும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க கேளிக்கை அல்லது பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது கூடாது. இந்த நிபந்தனைகளை மீறுவோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
தேர்தல் பிரசாரம் ஓய்ந்தபின் நட்சத்திர பேச்சாளர்கள் மற்ற அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தல் போன்றவற்றில் பங்கேற்று தேர்தல் தொடர்பான விசயங்களில் கருத்து தெரிவிக்க கூடாது, வெளிதொகுதிகளில் இருந்து வந்துள்ள அரசியல் தலைவர்கள் தொண்டர்கள் 16ம் தேதி 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும், மேலும் வழங்கப்பட்டுள்ள வாகன அனுமதி அனைத்தும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் செல்லுபடியாகாது, வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்த ஏதுவாக வேட்பாளர், வேட்பாளர் முகவர் மற்றும் தொண்டர்கள் பயன்படுத்த ஒரு வாகனம் என மூன்று வாகனம் மட்டுமே தனியே அனுமதி பெற வேண்டும் எனவும், வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர்களின் தற்காலிக அலுவலகம் அமைக்கவும், அதில் இரண்டு நபர் மட்டுமே அங்கு பணியாற்ற அனுமதிக்கப்படுவார். தேவையற்ற கூட்டத்தினை தவிர்த்திடவும், அங்கு உணவு பண்டங்கள் பரிமாற அனுமதிக்கப்படாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.