திண்டுக்கல், ஏப்.16: நிலக்கோட்டையில் சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன் தெரிவித்தார். திண்டுக்கல் மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் ஜோதிமுருகன், வத்தலக்குண்டு, சேடபட்டி, அணைப்பட்டி, நிலக்கோட்டை, விருவீடு, சிலுக்குவார்பட்டி, எம்.வாடிப்பட்டி உட்பட பல இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வத்தலக்குண்டு, சேடப்பட்டி, அய்யம்பாளையம் உட்பட பல இடங்களில் குடிநீர் பிரச்னை உள்ளது. பெண்கள் காலி குடங்களுடன் போராடி வருகின்றனர். பழைய வத்தலக்குண்டு உட்பட பல இடங்களில் குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
58 கால்வாய் திட்டம் துவங்கிய சில மணிநேரத்தில் கரைகள் உடைந்து தண்ணீர் வீணாகியது. மண் கரைகளாக இருந்ததால், இந்த நிகழ்வு ஏற்பட்டது. மண் கரைகளை சிமென்ட் சிலாப்புகள் போட்டு பலப்படுத்தி, திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கும், கண்மாய், குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். வத்தலக்குண்டில் பைபாஸ் ரோடு துவங்கிய பின்பும் காளியம்மன் கோயில் அருகில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வத்தலக்குண்டு பகுதியில் விவசாயிகள் அதிகளவு இருந்தும் ரோட்டையே மார்க்கெட்டாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல், விபத்துக்களும் நடக்கிறது. வத்தலக்குண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மார்க்கெட் அமைக்கப்படும். நிலக்கோட்டையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும்’’ என்றார். அவருடன் கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராமுத்தேவர், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சதீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.