செம்பட்டி, ஏப்.16: சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் அமைந்துள்ளது அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில். 16 அடி உயரத்தில் நின்ற நிலையில் தன்னை வணங்க வரும் பக்தர்களை வணங்குவது போல் சிலை அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்தியாவிலேயே 27 வகையான அலங்காரங்கள் சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் நாளன்று 10,008 பழங்களை கொண்டு சிறப்பு பழக்காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இவ்வருடம் விகாரி வருட பிறப்பை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 10,008 பழங்களை கொண்டு சிறப்பு நட்சத்திர பழக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஆப்பிள், கொய்யா, மாதுளை, பச்சை ஆப்பிள், கோவைப்பழம், செர்ரிப்பழம், தேங்காய், தர்பூசணி, விளாம்பழம், முலாம்பழம், அன்னாசிப்பழம், சப்போட்டாபழம், வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை, பலாப்பழம் உட்பட 27 வகையான பழங்களை கொண்டு நட்சத்திர பழக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர்.