×

நாகை மக்களவை தொகுதியில் இந்திய கம்யூ. உள்பட அனைத்து வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரம்

திருவாரூர், ஏப். 16: நாகை எம்.பி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக உட்பட அனைத்து வேட்பாளர்களும்  இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை எம்பி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செல்வராஜ், அதிமுக சார்பில் சரவணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செங்கொடி, மக்கள் நீதி மையம் சார்பில் குருவையா, நாம் தமிழர் கட்சி சார்பில் மாலதி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அனிதா மற்றும் சுயேட்சைகள் உட்பட மொத்தம் 15 பேர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இவர்கள் அனைவரும் தீவிர வாக்கு  சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜூக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, பாண்டியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொது செயலாளர் வைகோ, திக தலைவர் வீரமணி  உட்பட பலரும் வாக்கு சேகரித்தனர்.

இதேபோல் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட பலரும் வாக்கு சேகரித்தனர். இதேபோல் அமமுக வேட்பாளர் செங்கொடிக்கு அதன் துணை பொது செயலாளர் தினகரன், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் குருவையாவிற்கு அதன் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாலதிக்கு அதன் தலைவர் சீமான் உட்பட பலரும் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 15 வேட்பாளர்களும் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Indian Council ,constituency ,Nagay Lok Sabha ,final ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...