சேலம், ஏப்.14: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி சென்றவர்களிடம், அதிமுக வேட்பாளர் சரவணன் வாக்கு சேகரித்தார். சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று ஓமலூர் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு, தாராபுரம், களர்காடு, கோட்டைமேடு, கஞ்சநாயக்கன்பட்டி, பூசாரிப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏக்கள் சிவபெருமான், பல்பாக்கி கிருஷ்ணன், தமாகா மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், பாமக மாவட்ட தலைவர் மாணிக்கம், சித்தேஸ்வரன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை நேரத்தில், சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபயிற்சி சென்றவர்களிடம் வேட்பாளர் சரவணன், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அப்போது வேட்பாளர் சரவணன், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி, ஏழை மக்களின் காவலனாக விளங்கி வருகிறார். சேலத்தில் மேம்பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளார். எனவே, தொடர்ந்து நல்ல பல திட்டங்கள் சேலத்திற்கு செய்திடும் வகையில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்,’ என்றார். அவருடன் பகுதி செயலாளர் யாதவமூர்த்தி உள்பட நிர்வாகிகள் சென்றிருந்தனர்.