குளச்சல், ஏப்.14 : நித்திரவிளை அருகே ஊத்துக்குழி பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 9ம் வகுப்பு படிக்கும்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாலிபரின் நடத்தை சரியில்லாததால், மாணவி அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். தற்போது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வாலிபர், மாணவியின் வீட்டில் புகுந்து அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வாலிபர், மாணவியிடம் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் மாணவியின் தாயாரையும் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு தப்பி சென்றார். இது குறித்து மாணவியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.