×

டிடிவி தினகரனுக்கு தூது விவகாரம் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் காங். வேட்பாளர் எச்.வசந்தகுமார் பரபரப்பு பேட்டி

நாகர்கோவில், ஏப்.12: டிடிவி தினகரனுக்கு தூது அனுப்பிய விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில்  இருந்து வாபஸ் வாங்க வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்லில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கன்னியாகுமரி உள்பட 5 தொகுதிகளில் பாஜ போட்டியிடுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமார், பா.ஜ., சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் லெட்சுமணன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜக தரப்பில் தங்களுக்கு தூது அனுப்பப்பட்டதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பரபரப்பு தகவலை வெளியிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் ‘பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக கன்னியாகுமரியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு தூது அனுப்பியிருந்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் அமமுக சார்பாக சிறுபான்மையினரை நிறுத்த பாஜ எங்களை அணுகியது. கன்னியாகுமரி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜ மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக என்னிடம் தூது அனுப்பினார். ஆனால் நாங்கள் பொன்னாரை இதுவரை நேரடியாக சந்திக்கவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை.

கருப்பு முருகானந்தம் எனது சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர். அந்த வகையில் அவர் தொடர்பு கொண்டார். சிறுபான்மை வேட்பாளரை நிறுத்தாவிட்டாலும் பரவாயில்லை. கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை அமமுக சார்பாக நிறுத்துமாறு தொடர்ந்து பாஜ நெருக்கடி கொடுத்தது. இது போல பல்வேறு நிர்ப்பந்தங்கள் எனக்கு பாஜ தரப்பில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார், ‘தினகரனே ஒரு செய்தியை சொல்வதாக இருந்தால் உண்மையாக இருக்கும். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தோல்வி பயம்.  கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அவர் ஈசியாக ஜெயிக்க வேண்டும். எனவே பலமிழந்த ஒருவரை நீங்கள் வேட்பாளராக போட வேண்டும். அப்படி போட்டால் நான் எளிதாக வெற்றிபெறுவேன் என்ற நிலையை எடுத்துள்ளார். இது தவறான முன்னுதாரணம். சாதாரணமாக ராதாகிருஷ்ணன் எதனையும் சரியாக செய்வதில்லை. எனவே இதனையும் தவறாக செய்துள்ளார்.  அரசியல் என்றால் போர்க்களத்தில் நாம் சந்திக்க வேண்டும். வீட்டிற்குள் சந்திப்பது அரசியல் அல்ல. எனவே பொன்.ராதாகிருஷ்ணன் தேர்தலில்  இருந்து வாபஸ் வாங்க வேண்டும் என்பதே எனது கருத்து’ என்றார்.

பொய் சொல்கிறார் டிடிவி தினகரன்பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:

டிடிவி தினகரன் பேட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த கருப்பு முருகானந்தம், ‘டிடிவி தினகரனை தொடர்பு கொண்டது உண்மைதான், அதற்கும் இந்த வேட்பாளருக்கும் தொடர்பும் இல்லை. நான் எதற்காக பேசப்போகிறேன் என்பதை ஊகித்துக்கொண்டுதான் இந்த குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்’ என்று பதில் அளித்திருந்தார். இந்தநிலையில் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ‘பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியில் இருந்து வாபஸ் பெற வேண்டும்? என்று வசந்தகுமார் கூறுகிறாரே? என்று கேட்டதற்கு ‘அவர் தோல்வியை உணர ஆரம்பித்துள்ளார். தங்களுக்கு தோல்வி என்பதை உணர ஆரம்பித்து அவர்களாகவே சென்றால் சென்றுவிடட்டும் என்று வேண்டுகிறார் என்று நினைக்கிறேன். அவர் பேட்டியை (டிடிவி தினகரன்) நான் முழுக்க பார்க்கவில்லை. அதற்கு கருப்பு முருகானந்தம் என்ன சொன்னார் என்று தெரியாமல் நான் ஏதும் சொல்ல முடியாது’ என்று பதில் அளித்தார். பின்னர்  இது குறித்து நேற்று பொன்.ராதாகிருஷ்ணன் திருநந்திக்கரை பகுதியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்வது போல் 10 ஆயிரம் பொய் சொல்லி எலெக்ஷனை முடிக்க முடியுமா? என்று டிடிவி தினகரன் பார்க்கிறார்’ என்றார். பா.ஜ. கூட்டணி முயற்சி தோல்வியில் முடிந்ததால் இவ்வாறு பேசினாரா? என்று கேட்டதற்கு ‘அதனை அவரிடம்தான் கேட்க வேண்டும்’ என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.

Tags : Ponangara Radhakrishnan ,DONI Dinakaran ,contest ,Candidate ,H. Vasanthakumar ,
× RELATED 2 தொகுதியில் ஒடிசா முதல்வர் போட்டி