×

கந்தர்வகோட்டையில் ஆண்டு கணக்கில் போராடிய முதியவருக்கு ஆதார் அட்டை

கந்தர்வகோட்டை, ஏப்.12: கந்தர்வகோட்டையில் எந்தவித அடையாள அட்டையும் இல்லை என புகார் மனு கொடுத்தவருக்கு முகவரியோடு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த ராசு மகன் முனியாண்டி (60). இவருக்கு  எந்தவிதமான அடையாள அட்டையும் இல்லாததால் கடந்த தேர்தல் வரை ஒருவருக்குகூட வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்நிலையில் மறுபடியும் சிலதினங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனுப்பெட்டி முன் அழுதபடி மீண்டும் கோரிக்கை மனு போட்டிருந்தார். இந்த செய்தியும் தினகரன் நாளிதழில்  வெளியானது.

கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்திற்கு தனிதுணை கலெக்டர் ஸ்ரீகிருஷ்ணன்  நேரில் வந்து முனியாண்டியை கிராம உதவியாளர்கள் மூலம் பைக்கில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார். பின்னர் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டை எடுக்க மீண்டும் பதிவுகளை செய்தனர். ஏற்கனவே எடுத்திருந்த ஆதார் பதிவுகள் இல்லாத காரணத்தினால் மீண்டும் எடுக்கப்பட்டது. முனியாண்டி தற்போது எந்த இடமும் இல்லாத காரணத்தினால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புறம்போக்கு பகுதியில் வசித்து வருகிறார். அந்த விலாசத்திலேயே புதிய ஆதார் அடையாள அட்டை எடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. அடையாள கிடைக்க உதவி செய்த தினகரன் நாளிதழுக்கு நன்றியை முனியாண்டி தெரிவித்துக் கொண்டார்.

Tags : elderly ,
× RELATED ஓட்டுப்போட வந்த முதியவர்கள் 3 பேர் மயங்கி விழுந்து சாவு