×

துக்க நிகழ்ச்சிக்கு வந்த மூதாட்டி மரணம்

கூடலூர், ஏப். 12: கூடலூர் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(60) விவசாயி. இவரது தாயார் அய்யம்மை(80) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை காலமானார். இதுகுறித்து துக்கம் விசாரிக்க கோவையிலிருந்து ஜெயராஜின் மாமியார் ராஜாமணியம்மாள்(80) நேற்று கூடலூர் வந்தார். துக்கவீட்டிற்கு வந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை கம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், அய்யம்மையின் உடலை ஜெயராஜின் உறவினர்களும், பொதுமக்களும் கூடலூரிலுள்ள மயானச்சோலைக்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். அப்போது ஜெயராஜ் வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. அப்பகுதி மக்கள் இதுகுறித்து கம்பம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள்ளாக வீட்டிலிருந்த மரம், கட்டில், பீரோ உட்பட என சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா என தீயணைப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.   இதனால் இறந்த ஜெயராஜின் மாமியார் ராஜாமணியம்மாள் உடலை அருகே உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்துள்ளனர். துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர் மரணமடைந்ததும், துக்கவீடு வீடு தீப்பிடித்ததும் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : mourning death ,mourning event ,
× RELATED வீட்டில் மயங்கி விழுந்து பெண் பரிதாப சாவு