கொடைக்கானல், ஏப். 12: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அட்டுவம்பட்டியிலிருந்து துவங்கிய பேரணி வில்பட்டி வரை சென்றது. தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளியில் மாணவிகள், 100 சதவீத வாக்குப்பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். பின்னர் மாணவிகள், எப்படி வாக்குப்பதிவு செய்வது பற்றிய விளக்க முறைகளை பொதுமக்களுக்கு செய்து காண்பித்தனர்.
மேலும் ஓட்டு போடுவது சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்கு 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பேரணியில் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைபயாளர் பூர்ணிமா, பள்ளி தலைமையாசிரியர் மாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய தேர்தல் பிரிவு சார்பாக வில்பட்டியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், தெருமுனை வீதி நாடகங்கள் நடத்தப்பட்டது.