நத்தம், ஏப். 12: நத்தம் அருகே சமுத்திராபட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. முதல் நாள் ஊரணியில் அம்மன் கரகத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் அம்மன் மின் ரதத்தில் எழுந்தருளி அதிர்வேட்டுகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரணியில் புறப்பட்ட ஊர்வலம் கோயிலை சென்றடைந்தது.
அங்கு மந்தையில் வைக்கப்பட்ட அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து மறுநாள் அக்னிச்சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. அன்றிரவு கோயிலிலிருந்து பரிவாரங்களுடன் அம்மன் புறப்பட்டு ஊரணியை சென்றடைந்தது. ஏற்பாடுகளை கோயில் காரணக்காரர்கள், விழா குழுவினர், ஊர்மக்கள் செய்திருந்தனர்.