×

மணப்பாறை அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தாததால் மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு கிராமம் முழுவதும் ப்ளக்ஸ் பேனர்

மணப்பாறை, ஏப்.11:  மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை நான்கு ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தாததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து பிளக்ஸ் பேனர் கட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 136 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்க சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள மணப்பாறைக்கு சென்று வரும் நிலை இருந்து வருகிறது. கே.பெரியபட்டியில் இருந்து மணப்பாறைக்கு செல்ல முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

எனவே கே.பெரியபட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 2014ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகின்றனர். இக்கோரிக்கையை நிறைவேற்றினால் சுற்று வட்டாரப் பகுதிகளான சொக்கம்பட்டி, மொண்டிபட்டி, சத்திரப்பட்டி, சீத்தப்பட்டி, போடுவார்பட்டி, பூங்குடிபட்டி, ஊத்துப்பட்டி, செல்லகவுண்டம்பட்டி, தெற்கு சேர்ப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வியை கே.பெரியப்பட்டியிலேயே பயில முடியும். ஆனால் நான்கு ஆண்டுகளாக பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராமம் முழுவதும் ஆங்காங்கே ப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : village ,elections ,government school ,Lok Sabha ,Marapara ,
× RELATED “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான...