×

தாமிரபரணி கரையில் காங்கயம் தம்பதி தற்கொலை


காங்கயம்,ஏப். 11: திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த தம்பதியர் குடும்பத்தகராறு காரணமாக தாமிரபரணி நதிக்கரையில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
 தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு ஊருக்கு கீழ்புறம் தாமிரபரணி ஆறு தடுப்புசுவர் அருகே அழுகிய நிலையில் ஆண், பெண் உடல் கிடப்பதாக ஏரல் போலீசாருக்கு கொற்கை விஏஓ தகவல் கொடுத்தார். ஸ்ரீவைகுண்டம் போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். ஏரல் சுற்றுவட்டார போலீஸ் நிலையங்களில் யாராவது காணாமல் போனது தொடர்பாக புகார் பதிவாகியுள்ளதா என போலீசார் விசாரித்தனர். ஆத்தூர் காவல் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த கணவன், மனைவியை காணவில்லை என அவர்களது உறவினர்கள் தேடி வந்ததாகவும், காணாமல் போனவர்களின் செல்போன் நம்பரை வைத்து விசாரித்ததில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கடைசியாக ரீச்சாகியிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆத்தூர் பகுதியில் தேடிப்பார்த்தும் அவர்களை கண்டறிய முடியாததால், மாயமானவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் தெரிவிக்குமாறு கூறிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து ஏரல் போலீசார் அவர்கள் கொடுத்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசியதில் இறந்தவர்களின் மகள் மற்றும் உறவினர்கள் ஏரல் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில் இறந்தது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா குங்காருபாளையம் விவசாயி சிவசுப்பிரமணியன்(66), அவரது மனைவி பாலாமணி(56) என்பது தெரியவந்துள்ளது.  இவர்களுக்கு ஒரே மகள் பவித்ரா(27) பி.இ படித்துவிட்டு கோவையில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இறந்த சிவசுப்பிரமணியன் வீட்டில் குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த தம்பதி கடந்த 4ம்தேதி வீட்டை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரவில்லை. இதையடுத்து மகள் பவித்ரா மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிய நிலையில் அவர்கள் தற்கொலை செய்ததும், அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டதும் தெரியவந்ததாக உறவினர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். இறந்த பாலாமணி வாயில் கீழ் வரிசையில் பல்செட் மாட்டியிருப்பதாக மகள் அடையாளம் காட்டினார். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : suicide ,shore ,Thamiraparani ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை