×

மேட்டுப்பாளையம் பகுதியில் ஆ.ராசா பிரசாரம்

மேட்டுப்பாளையம், ஏப். 11: நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று மேட்டுப்பாளையம்   பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் செய்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவுடன் தி.மு.க நகர செயலாளர் முகமது யூனிஸ், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் சென்றனர். வேட்பாளர் ஆ.ராசா காரமடை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமப்பாளையம், பாலப்பட்டி, திம்மராயம்பாளையம், இரும்பொறை, பெத்திக்குட்டை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து பொதுமக்களிடையே ராசா பேசியதாவது:  நான்  பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் வீட்டு பிள்ளையாக எப்போதும் வலம் வருகிறேன். உங்களது சுக துக்கங்களில் தவறாது பங்கேற்கிறேன். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.  மத்தியில் ஆளும் மதவாத மோடி அரசை நீக்கிவிட்டு ராகுல் காந்தி தலைமையில் மத்திய ஆட்சி அமையவும் மாநிலத்தில் உள்ள ஊழல் நிறைந்த எடப்பாடி பழனிச்சாமி அரசை அகற்றி விட்டு தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவும் நீங்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
 
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பயிர் கடன்கள்  அனைத்தும் ரத்து செய்யப்படும். சமையல் எரிவாயு பழைய விலைக்கே வழங்கப்படும். நீட்தேர்வு ரத்து செய்யப்படும். இவ்வாறு ராசா பேசினார். கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்எல்ஏ அருண்குமார், மதிமுக மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன்  மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பிரசாரத்தில் பங்கேற்றனர்.

Tags : Aarasa ,area ,Mettupalayam ,
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.1.17 லட்சம் சிக்கியது