தேனி, ஏப். 10: பாராளுமன்றத் தேர்தலின் போது 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தேனியில் நடந்தது. தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்றத் தொகுதி பொதுத்தேர்தல், ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி பழனிசெட்டிபட்டியில் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் 100 மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு டீசர்ட், தொப்பி அணிந்து 100 மூன்று சக்கர மோட்டார் சைக்கிளில் பேரணி சென்றனர். இப்பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ் நேற்று துவக்கி வைத்தார். தேனி பழனிசெட்டிபட்டியில் துவங்கிய பேரணி தேனி நேருசிலை, பெரியகுளம் ரோடு, ரயில்வே கேட், பிசிகான்வென்ட் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.