கடலூர், ஏப். 10: நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கடலூரில் நான்கு கிலோமீட்டர் தூரம் மினி மாரத்தான் நடைபெற்றது. ஆட்சியர் அன்புச்செல்வன் துவக்கி வைத்து பங்கேற்றார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாவட்ட தேர்தல் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடலூரில் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அன்புச்செல்வன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
கடலூர் டவுன்ஹாலில் துவங்கிய மாரத்தான் பாரதி சாலை, சில்வர் பீச் சாலை, வண்ணார பாளையம் வழியாக கடலூர் கடற்கரை அருகே நிறைவுபெற்றது. நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் மாணவர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சம்பத், பிரதீப், கோபி மற்றும் மாணவிகள் ரச்சினையா, இலக்கியா, திவ்யா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை ஆட்சியர் சரயு, வட்டாட்சியர் செல்வகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.