×

பாஜ.வும் அதிமுகவும் கமிஷனுக்காக 8 வழிச்சாலை திட்டத்தை அமலாக்கின சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

மதுரை, ஏப்.10: தமிழகத்தில் பாஜவும் அதிமுகவும் கமிஷனை பெற தான் 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தின என்று மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து நேற்று கே.புதூர் பஸ் ஸ்டாண்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘‘கடந்த ஐந்தாண்டு காலத்தில் மோடி அரசாங்கம் அனைத்து மக்கள் மீதும் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வந்திருக்கிறது. பாஜ ஆட்சியில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ரபேல் விமான ஊழலில் அம்பானிக்கு விமான ஒப்பந்தத்தை வழங்க பிரதம அமைச்சகம் எந்த அளவுக்கு உழைத்துள்ளது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பாஜ.வும் அதிமுகவும் கமிஷனை பெற தான் 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியது. ஆனால் சரியான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த கொள்ளையை தடுக்கதான் இந்த தேர்தல்’’ என்றார்.கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி, திமுக மாநில தீர்மானக் குழு தலைவர் பொன்.முத்துராமலிங்கம், மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Sitaram Yechury ,BJP ,AIADMK ,commission ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...