திண்டுக்கல், ஏப். 10: திண்டுக்கல் மாவட்டத்தில் பதட்டமான 137 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மக்களவை தொகுதியும், கரூர் மக்களை தொகுதியில் வேடசந்துார் பகுதியும் வருகிறது. மாவட்டத்தில் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு கடந்த ஒருமாதமாக தேர்தலை அமைதியாக நடத்தவும், வாக்காளர்கள் அச்சப்படாமல் இருக்கவும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி கடந்த தேர்தல் காலங்களில் நடந்த வன்முறைகள், தகராறுகள் ஆகியவற்றை கணக்கிட்டு அவற்றின் அடிப்படையில் மாவட்டத்தில் 137 வாக்குச்சாவடிகளில் கலவரம் நடக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவைகளுக்கு 3 ஆயிரத்து 500 போலீசாருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர்கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 204 மண்டலமாக பிரித்துள்ளோம். வாக்காளர்கள் அச்சம் இல்லாமல் ஓட்டுப்போடுவதற்கு, அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்படும். பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவம் மற்றும் லோக்கல் போலீசார் இணைந்து பணியாற்றுவார்கள். துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பும் நடக்கும். மேலும் 5க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஓட்டு இயந்திரங்கள் சாவடிக்கு கொண்டு செல்வதற்கும், எடுத்து செல்வதற்கும் பயன்படுத்தப்படுவார்கள். ரோந்து படையினரும் ஆங்காங்கு ரோந்து சுற்றி வருவர்’ என்றனர்.