கடையம், ஏப். 10: கடையம் அருகே காட்சி பொருளாக இருந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியானது, தினகரன் செய்தி எதிரொலியாக மின் மோட்டார் பழுது சரி செய்யபட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடையம் ஒன்றியம், கீழ ஆம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ யாதவர் தெருவில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மூலம் கீழ யாதவர் தெரு, ராமர் கோயில் தெரு, பஸ் ஸ்டாண்ட் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வந்தனர். இதனிடையே இந்த சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் தண்ணீர் ஏற்றப் பயன்படும் மின் மோட்டார் திடீரென பழுதானது. இதனால் முறையாக தண்ணீர் ஏற்ற முடியாததால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனிடையே கொளுத்தும் வெயிலால் அணைகளில் தண்ணீர் வற்றியதோடு ஆறுகளில் தண்ணீர்வரத்து குறையத் துவங்கியது. இதன் காரணமாக தெரு குடிநீர் குழாய்கள் மட்டுமின்றி வீட்டு குழாயிலும் தண்ணீர் குறைவாக விழுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்த செய்தி தினகரனில் கடந்த மாதம் 25ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பழுதான மின்மோட்டாரை சரிசெய்தனர். இதையடுத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.