ஆம்பூர், ஏப்.10: ஆம்பூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் புகுந்த புள்ளி மானை அப்பகுதியினர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்டது சாணாங்குப்பம் காப்புக்காடு. இங்கு அதிகளவில் புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் போதிய குடிநீர் இன்றி இந்த மான்கள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி வருவது வாடிக்கையாகிவிட்டது.இந்நிலையில், நேற்று காலை ஆம்பூர் அடுத்த மின்னூர் இலங்கை அகதிகள் முகாமில் நாய்கள், ஒரு புள்ளி மானை துரத்துவதை அப்பகுதியினர் கண்டனர். உடனே, நாய்களை விரட்டிவிட்டு புள்ளி மானை பத்திரமாக மீட்டனர்.பின்னர், ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.