திருப்பூர், ஏப்.9: திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கார்பரேட் பின்னலாடை நிறுவனங்களை சார்ந்து பல ஆயிரக்கணக்கான ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், மொத்த ஜவுளி வியாபார சந்தைகளில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் ேசர்ந்த வியாபாரிகள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான ஆடைகளை நேரடி கொள்முதல் செய்கின்றனர். கார்பரேட் நிறுவனங்கள், மொத்த வியாபார சந்தைகளில் தவணை முறையில் வாங்குவோர்களுக்கு ஒரு விலையும், பணம் கொடுத்து வாங்குவோர்களுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்து வழங்குவது வழக்கம்.
இதனால், பெரும்பாலான வியாபாரிகள் பணத்தை கொடுத்து ஆடைகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். தற்போது மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களிலிருந்து வியாபாரிகள் திருப்பூர் வருவதை நிறுத்திக்கொண்டனர். திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் நேரடி விற்பனை நிலையங்கள், மொத்த ஜவுளி சந்தை ஆகியவற்றில் போதிய வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பின்னலாடை நிறுவனங்களில் நேரடி விற்பனையாகும் பணத்தைக்கொண்டு ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு வாரம் ஒரு முறை தைத்த ஆடைகளுக்கு உரிய கூலியை கொடுப்பது வழக்கம். மொத்த ஜவுளி சந்தை வியாபாரிகள் பல்வேறு பின்னலாடை நிறுவனங்களில் தவணை முறையில் ஆடைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்த பின் பணம்கொடுப்பது வழக்கம். தற்போது, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆடைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் வராததால் தினமும் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜவுளிசார்ந்த வியாபாரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் முற்றிலும் நின்றதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.